Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அகத்தூய்மையால் அலங்கரிக்கத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு; I: இச :4: 1-2,6-8; II : தி.பா: 15: 2-3. 3-4. 5; III: யாக்: 1: 17-18, 21b-22, 27; IV: மாற்: 7: 1-8, 14-15, 21-23
ஒரு ஊரில் சத்துமாவு உற்பத்தி செய்து அதன் வழியாக தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என இரு மனிதர்கள் முடிவெடுத்தனர். ஒருவர் அதிக முதலீடு போட்டுதரமான சத்துமாவினை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். மற்றொருவர் குறைந்த செலவில் சத்து மாவு தயாரித்து அதிக வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதிக முதலீடு போட்டு தரமான சத்து மாவை வழங்கிய மனிதர் உண்மையோடும் நேர்மையோடும் வியாபாரம் செய்தார். குறைந்த முதலீட்டில் தரம் குறைந்த சத்துமாவினை உற்பத்தி செய்த மற்றொரு நபர் தான் உற்பத்தி செய்த பொருளை ஒரு மாவு நிறுவனத்தில் வியாபாரம் செய்ய கொடுத்துவிட்டார். தரம் குறைந்த சத்துமாவு மக்கள் மத்தியில் அறிமுகமான பெரிய நிறுவனத்தின் பெயரில் விளம்பரத்தோடு வந்தது. எனவே இந்த தரம் குறைந்த சத்துமாவு மக்கள் மத்தியிலேயே அதிகமாக விற்பனையானது. ஆனால் தரமான அந்த சத்துமாவினை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. காரணம் அது விளம்பரம் செய்யப்படவில்லை. தரம் குறைந்த சத்துமாவினை தயாரித்தவர் செல்வந்தர் ஆனார். தரமான சத்துமாவினை தயாரித்தவர் வியாபாரத்தில் தோல்வியடைந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார். இதற்கு காரணம் விளம்பரம். விளம்பரம் நல்லதை தீயதாகவும் தீயதை நல்லதாகவும் காட்டக்கூடியது. இப்படித்தான் நம்முடைய அன்றாட வாழ்விலே வெளிப்புறத்தில் அழகாக இருந்தால் போதும் உட்புறத்தில் எவ்வளவு அழுக்கு இருந்தாலும் பரவாயில்லை என்று போகும் போக்கு அதிகமாக இருக்கின்றது.
இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற குழுவினர் இருந்தனர். இவர்கள் சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் மக்களை அடக்கி ஆளக்கூடியவர்களாக இருந்தனர். இன்றைய நற்செய்தியில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, 'உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல்
தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?' என்று கேட்டனர்'' (மாற்கு 7:5). பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் வெளிப்புற சடங்குகளுக்கும் வெளிப்புற அலங்காரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் உள்ளேயோ அழுக்கு நிறைந்த மனநிலையில் போலியான வாழ்க்கையை வாழ்ந்தனர். எனவே தான் ஆண்டவர் இயேசு அவர்களை இன்றைய நற்செய்தியில் கடுமையாகச் சாடியுள்ளார்.
இயேசு அவர்களைப் பார்த்து, "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறியுள்ளார். இதற்கு காரணம் அந்த அளவுக்கு கடவுளின் பெயராலும் மோசேயின் சட்டத்தின் பெயராலும் சாதாரண ஏழை எளிய பாமர மக்களுக்கு அநீதிகளை அவர்கள் செய்தனர். வெளிப்புறத்தில் நல்லவர்களைப் போல காட்டிக்கொண்டு தற்பெருமை கொண்டவர்களாகவும் ஆணவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். சுத்தம் முக்கியம்தான். ஆனால் அவர்கள் உண்மையான சுத்தத்திற்காக சீடர்களைப் பற்றிக் கூறவில்லை. மாறாக தங்களை தூய்மையானவர்களாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இவ்வாறு செய்தனர். இதற்கு தான் ஆண்ட இயேசு அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.
சுத்தம் நம் வாழ்க்கையில் முக்கியம். ஆனால் அந்த சுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைப் போல உட்புறத்திலும் இருக்கவேண்டும். "சுத்தம் சுகம் தரும் " என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. நம் உடலையும், இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் நாம் தூய்மையாக வைத்திருந்தால் தான் வெளியில் பரவும் நோய்களிலிருந்து நம்மைக் காக்க முடியும். அதேபோல நமது அகமாகிய மனதையும் நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது சிந்தனைகள் தூய்மையாக இருக்க வேண்டும். அல்லாமல் நமது மனம் பொய்மை, வஞ்சகம், பொறாமை, பகை, பேராசை, காமம், சுயநலம் போன்வற்றால் நிறைந்திருந்தால் நாம் பலவித நோய்களுக்கு உள்ளாக நேரிடும். இதை உளவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே புறத்தூய்மை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஏன் அதைவிட மேலாகவே அகத்தூய்மை முக்கியமாகிறது.
எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் புறத் தூய்மைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அகமும் புறமும் தூய்மையாக இருக்கின்ற பொழுது நாமும் மறு கிறிஸ்துவாக உருமாறுகிறோம். நம்முடைய வாழ்வு நிறைவுள்ள வாழ்வாக இருக்க வேண்டுமெனில் அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்வில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டுமெனில் அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்வில் போலியான இரட்டை வாழ்வு வாழும் பொழுது நம்மோடு வாழக்கூடிய மக்களை ஏமாற்றலாம். ஆனால் நம்மைப் படைத்த கடவுளை ஏமாற்ற முடியாது. எனவே எப்பொழுதும் ஆண்டவர் இயேசுவைப் போல தூய்மையான உள்ளத்தோடு வாழத் தேவையான அருளை வேண்டுவோம். இவ்வுலகம் சார்ந்த போலிகளுக்கும் மாய கவர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், உண்மையான தூய்மை வாழ்வுக்கும் நற்செய்தி மதிப்பீட்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்து நம் வாழ்வை அலங்கரிப்போம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
தூய இறைவா! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் அகத் தூய்மைக்கு எந்நாளும் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment