தாழ்ச்சியை நம் தாரக மந்திரமாக்குவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 20 ஆம்   சனி; I: ரூத்2: 1-3, 8-11; 4: 13-17; II: தி.பா:  திபா 128: 1-2. 3. 4-5; III: மத்: 23: 1-12

தாழ்ச்சி என்பது புண்ணியங்களுக்கு எல்லாம் மேலான புண்ணியமாக இருக்கின்றது. அத்தாழ்ச்சியை எவரொருவர் தனதாக்கிக் கொள்கிறாரோ அவர் வாழ்வின் உச்சத்தை அடைவார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 

விடுமுறை நாளன்று கடலோரத்தில் பலர்அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர். தீடீரென ஒரு சிறு குழந்தை கடலில் மூழ்கத் தொடங்கியது. அதைக் கண்ட பலரும் எப்படியாவது அக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் எனப் போராடினர். இறுதியில் கடலோரக் காவல் படையிலிருந்து ஒருவர் வந்து அக்குழந்தையைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்து முதலுதவிகள் செய்தார். அக்குழந்தை கண் விழிக்க சற்று தாமதமானது. அப்போது அவ்வழியே வந்த ஒரு முதயவர் முன்வந்து அக்குழந்தையை காப்பாற்ற விழைந்தார். ஆனால் அக்காவல் படையைச் சார்ந்தவர் "குழந்தைக்கு எல்லா முதலுதவிகளும் செய்யப்பட்டு விட்டது. யாரும் அவரை நெருங்க வேண்டாம் " எனச் சொல்லி அம்முதியவரைத் தடுத்தார். அவரும் ஓரமாய் நின்றுவிட்டார். தன்னைப்போல முதலுதவி செய்ய யாருக்குத் தெரியப்போகிறது என்ற நினைப்பு அவருக்குள்ளே இருந்தது. குழந்தையும் கண்விழித்தது. அனைவருக்கும் மகிழ்ச்சியாயிருந்தது. திடீரென அக்காவல் படையினருக்கு ஒரு வித மயக்கம் ஏற்பட்டது. மூச்சுத்திணறி கீழே விழுந்தார். சிறிது நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது அவர் மருத்துவமனையில் இருந்தார். அவர் குழந்தையைத் தொட வேண்டாம் என்று கூறிய அம்முதியவர் இப்போது அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து கொண்டிருந்தார். அப்போது தான் அவர் மருத்துவர் என அக்காவலருக்குத் தெரிந்தது. "நீங்கள் மருத்துவர் என ஏன் கூறவில்லை? " என்று கேட்ட காவலரிடம் "என்னை மருத்துவர் என அனைவரும் அழைக்க வேண்டும் என்பது என் விருப்பமல்ல. விலைமதிப்பில்லா ஒரு உயிர் துயரப்படும் போது காப்பாற்றுவதே என் விருப்பம் " என்று கூறி புன்னகைத்தார் அம்முதியவர். 

"தலைவராய் இருக்க விரும்பும் எவரும் தொண்டராய் இருக்கட்டும். தன்னைத் தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" என இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார்.இயேசு கூறிய இவ்வார்த்தைகளை வாழ்வாக்குவது சற்று கடினமான காரியம் தான்.  பிறர்முன் தன்னை பெரியவராய் காட்டிக்கொள்ளக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் நம்மில் பலருக்கு உண்டு. தம் திறமைகளையும், படிப்பறிவையும், பணபலத்தையும் மற்றவர் முன் கூறி பெருமைப்படுபவர்கள் அதிகமானோர் இவ்வுலகில் உள்ளனர். அத்தோடு மட்டும் நின்றுவிட்டால் பறவாயில்லை. ஆனால் நாமோ இவற்றையெல்லாம் கொண்டிருப்பதால் பிறரைவிட நாம் உயர்ந்தவர் என்றும் பிறர் நமக்கு கீழ்பணிந்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இது நாம் மறுக்க முடியாத உண்மை. இத்கைய மனநிலையையே இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் கொண்டிருந்தனர்.
எனவேதான் இயேசு அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்குமாறு கூறுகிறார்.

அன்புக்குரியவர்களே நம்மைப் பெரியவர்களாய்ப் பிறர் நினைக்க வேண்டும் என்பதற்காக நாம் பகட்டான தோற்றத்தைக் காண்பித்து பெருமிதத்தோடு நம் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் அல்ல. தாழ்ச்சியோடு நம் கடைமைகளைச் செய்தாலே போதும். அத்தாழ்ச்சியே நம்மைப் பெரியவர்களாக்கும். தலைமைப் பண்புக்கு தாராக மந்திரமே தாழ்ச்சிதான். அதை உணர்ந்து இயேசு எனும் நம் மாபெரும் தலைவரைப்போல தாழ்ச்சியுடன் வாழ்ந்து உயர்வடைவோம்.

இறைவேண்டல்

இயேசு எம் தலைவரே உம்மைப்போல தாழ்ச்சி எனும் தாரகமந்திரத்தை அகத்திலே கொண்டு வாழ்விலே உயர வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 5 =