Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறையரசுக்கு நம்மை தயாரிப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 20 ஆம் வியாழன்; I: நீதி: 11: 29-39a; II : தி.பா: திபா 40: 4. 6-7a. 7b-8. 9 ; III: மத்: 22: 1-14
இன்றைய நற்செய்தி வாசகம் இறையாட்சிக்கு உட்பட தகுதியானவர்களாக நம்மையே தயாரிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலம் ஆண்டவர் இயேசு அருமையான ஒரு உவமையைக் கூறியுள்ளார். அரசர் வழங்குகின்ற திருமண விருந்திற்கு பலர் அழைக்கப்பட்டனர். அழைக்கப்பட்டோர் அனைவரும் அரசரின் அழைப்பை உதாசினப்படுத்தினர். அதன் விளைவாக அரசர் தன் பணியாளர்களை அனுப்பி காண்கின்ற அனைவரையும் அழைத்து வரச்சொன்னார். விருந்து அறை பலரால் நிரம்பிற்று. அதில் நல்லோரும் இருந்தனர். தீயோரும் இருந்தனர். அவர்களுள் திருமண ஆடையின்றி இருந்த ஒருவர் தண்டிக்கப்பட்டார். இவ்வாறாக இவ்வுவமை அமைகிறது.
இவ்வுவமை நமக்குக் கூறும் செய்தி என்ன? நாம் அணிய வேண்டிய திருமண ஆடை எது? என்பதைக் குறித்து நாம் சற்று ஆழமாக சிந்திக்க அழைக்ப்பட்டுள்ளோம்.
இறையரசு அனைவருக்கும் பொதுவானது. அங்கு நல்லோருக்கும் இடமுண்டு. தீயோருக்கும் இடமுண்டு. அதற்கு காரணம் கடவுளின் கருணையே. கடவுள் எல்லோர் மேலும் மழை பொழிகிறார். எல்லாருக்கும் ஒளிதருகிறார். அனைவருக்கும் ஒரே மாதிரியான பிறப்பு தான்.அனைவரையும் சுதந்திரமாக வாழவிடுகிறார். இதையே திருமண மண்டபம் நல்லோராலும் தீயோராலும் நிறைந்திருந்தது என்ற வார்த்தை நமக்கு விளக்குகிறது.
ஆயினும் வாழ்கின்ற விதத்தில் மனிதர்கள் தம்மில் வேறுபடுகின்றனர்.
நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கைதான் நமக்கு இறையரசின் விருந்துக்குரிய ஆடையாய் அமைகிறது. நன்மைகள் செய்யவும் நல்லோராய் வாழவுமே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அதுவே நம் அனைவருக்குமான அழைப்பு.ஆனால் இவ்வழைப்பை நாம் உதாசினப்படுத்தும் போது இறையரசில் நுழையும் வாய்ப்பை நாம் இழக்கிறோம். அத்தோடு மட்டுமல்ல கடவுள் நமக்கு அணிவித்துள்ள அவ்வருளாடையை நாம் இழக்கிறோம்.
நாம் தீயோராகவே இருந்தாலும் தீச்செயல்கள் புரிந்தாலும் மனம்மாறி வாழ கடவுள் நமக்குப் பல வாய்ப்புகளைக் கொடுக்கிறார். அவற்றையெல்லாம்? பயன்படுத்தி கடவுளுக்கேற்றவாறு வாழ்ந்து விண்ணரசில் நுழையத் தேவையான ஆடையைப் பெற நம்மையே நாம் தயார் செய்ய வேண்டும்.
நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுளின் அழைப்பை உணர்ந்து இறைவேண்டலுடன் நற்பணிகளை நாம் செய்யும் போது நாமும் கடவுளாம் அரசரின் விருந்துக்குத் தயாராவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தோடு ஒவ்வொருநாளும் நற்கருணையெனும் ஆன்ம விருந்துக்கு கடவுளின் அருளைடையை அணிந்தவர்களாய் அவரை ஏற்க நம்மையே தயார் செய்வோம். அதற்கான வரம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா உமது அரசில் நுழையத் தகுதி பெறும் வண்ணம் உமது அருளாடையால் எம்மை உடுத்தும். உம் அரசக் குடிமக்களாய் வாழ எங்களையே நாங்கள் சிறப்பாகத் தயார் செய்ய உம் அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment