விண்ணரசு யாருக்குரியது? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 19 ஆம்  சனி; I: யோசு:  24:14-29; II : தி.பா:  136: 16: 1-2, 5, 7-8,11; III: மத்: 19: 13-15

மத்தேயு நற்செய்தியாளர் விண்ணரசை பற்றி   அதிகம் பறைசாற்றியுள்ளார். விண்ணரசு என்பது இறைவனின் அரசு. இந்த இறைவனின் அரசில் இறையாசி பெற்றிட நமக்கு குழந்தை உள்ளம் நமக்கு வேண்டும். குழந்தை உள்ளம் கொண்டவர்களிடம் தான் இறைவன் அதிகமாக தன் வல்லமையை வெளிப்படுத்துகிறார்."சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்" என்று ஆண்டவர்  இயேசு கூறியுள்ளார். குழந்தை உள்ளம் எல்லா மனிதனிடத்திலும் இருக்கின்றது. நம்மிடையே உள்ள குழந்தை உள்ளத்தின் மதிப்பீடுகளை  நம் வாழ்வில் கடைபிடிக்கும் பொழுது, நாம் இறைவனின் அருளையும் இரக்கத்தையும் நிறைவாக சுவைக்க முடியும்.

இன்றைய நாள் நற்செய்தியின் வழியாக ஆண்டவர் இயேசு  குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். குழந்தை உள்ளம் தான் இறைவனின் உள்ளத்தையும்  விண்ணரசின் மதிப்பீடுகளையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றன.  

ஆண்டவர் இயேசு நமக்கு ஏன் குழந்தை உள்ளம் இருக்க வேண்டும்? என்று விரும்புகின்றார். குழந்தை உள்ளம் தான் இறைவனின் மதிப்பீடுகளை சிந்திக்கக்கூடிய உள்ளம். அவற்றில் ஒரு சிலவற்றை பின்வருமாறு சிந்திக்கலாம். முதலாவதாக குழந்தைகள் பகைமையை விரைவில் மறப்பவர்கள். நாம் வாழும் இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் போட்டியும் பொறாமையும் பகைமையும் நிறைந்து காணப்படுகின்றன.இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளைப் போல் பகைமையை விரைவில் மறக்க மனம் இல்லாமையே ஆகும். குழந்தைகள் விளையாடுகின்ற பொழுது சண்டை போட்டால் உடனே அவற்றை மறந்து விடுவர். பின்னர் இயல்பாக மகிழ்ச்சியோடு விளையாடத் தொடங்குவார். ஆனால் இந்த மனநிலை பெரும்பாலும் பெரியவர்களுக்கு இருப்பதில்லை. நமக்கு எதிராக ஒருவர் பாவம் செய்துவிட்டால் அல்லது தீங்கு விளைவித்து விட்டால்  உடனே அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற மனநிலை அதிகமாக இருக்கின்றது. இந்த மனநிலையை விட்டுவிட்டு பகைமையை மறப்பவர்களாக நாம் வாழத் தொடங்கும் பொழுது இயேசுவின் விண்ணரசு மதிப்பீடுகளை நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்க முடியும்.

இரண்டாவது குழந்தைகள் கள்ளம் கபடுற்றவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வாழ்வில் எந்தவொரு கள்ளம் கபடம் இருக்காது. மாறாக திறந்த மனநிலை இருக்கும். சமத்துவ மனநிலை இருக்கும். எல்லோரும் தன் நண்பர்கள் என்ற மனநிலை இருக்கும். எல்லோரையும் அரவணைக்கக் கூடிய மனநிலை இருக்கும். இத்தகைய மனநிலை விண்ணரசின் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் மனநிலை ஆகும். இந்த மனநிலையை பெரியவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. ஜாதி, மதம், மொழி, இனம், பொருள்  போன்ற  பின்னணிகளை வைத்து மக்களை பிரித்தாளும் நிலை இச்சமூகத்தில் இருக்கின்றன. இத்தகைய நிலைகள் களையப்படுகின்ற பொழுது அங்கு கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் பிறக்கின்றது. அதில்தான் விண்ணரசின் மதிப்பீடுகளில் வெளிப்படுகின்றன.

மூன்றாவதாக குழந்தைகளின் உள்ளம் தூய உள்ளம். கடவுளின் உள்ளதைப்போல தூய்மை நிறைந்ததாக மாசற்ற இதயமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட உள்ளத்தை பெரியவர்களும் கொண்டிருக்கும் பொழுது நாம் கடவுளுக்கு உகந்த கருவியாக மாறமுடியும். "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் "(மத்: 5:8) என்று இயேசு கூறியுள்ளார். தூய்மையான உள்ளம் தான் நம்மை தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றன. இத்தகைய தூய உள்ளத்தை குழந்தைகளில் காணமுடியும். குழந்தைகள் தூய உள்ளத்தோடு இருப்பதால்தான் இறைமகன் இயேசு அவர்களை தன்னிடம் வருமாறு அழைக்கிறார். நாமும் குழந்தைகளைப் போல தூய உள்ளத்தோடு வாழும் பொழுது இயேசு நம்மை பார்த்தும் "பெரியவர்களை என்னிடம் வரவிடுங்கள் ; அவர்களைத் தடுக்காதீர்கள் "  நிச்சயமாக கூறுவார்.  எனவே குழந்தை உள்ளம் எல்லோருக்கும் முன்மாதிரியான பாடத்தை சுட்டிக்காட்டுகிறது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் குழந்தைகளின் மனநிலையை பெற்று விண்ணரசின் மதிப்பீடுகளுக்கு சான்று பகர்வோம்.  குழந்தை உள்ளத்தை பெற்றுக்கொள்ள தேவையான ஞானத்தையும் அருளை வேண்டி தம்மை முழுவதுமாக இயேசுவிடம் அர்ப்பணிப்போம்.

இறைவேண்டல் : 
அன்புள்ள இயேசுவே! எங்கள் அன்றாட வாழ்வில் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக நாங்கள் எந்நாளும் வாழ்ந்து உம்முடைய விண்ணரசின் மதிப்பீடுகளுக்கு சான்று பகர தேவையான அருளையும் ஞானத்தையும் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =