Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் இதயத்தைப் போல் மாறத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பத்தாம் வெள்ளி
இயேசுவின் திருஇதயம் பெருவிழா
I: ஒசே: 11: 1, 3-4, 8-9
II: எசா: 12: 2-3 , 4, 5-6
III: எபே: 3: 8-12, 14-19
IV : யோ: 19: 31-37
இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையானது இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. ஜூன் மாதம் என்றாலே இயேசுவின் திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மாதம். எனவேதான் பெரும்பாலும் இயேசுவின் திரு இருதயம் தாங்கியுள்ள திருவுருவப் படத்தை புனிதப்படுத்தும் வழக்கம் நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் ஒரு பக்தி முயற்சியாக இருந்து வருகின்றது. ஏனெனில் இயேசுவின் திரு இருதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் இரக்கமும் அருளும் அன்பும் தான் நமக்கு நிறைவான வாழ்வை வழங்கும் என்பது ஆழமான நம்பிக்கை.
இதயம் என்பது உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாகும். இதயத்துடிப்பு நமக்கு இல்லையென்றால் நாம் உயிர் வாழ முடியாது. இதயத்துடிப்பு சீராக இருக்கும் பொழுதுதான் நாம் உயிர் வாழ முடியும். அதேபோல நம்முடைய ஆன்மீக வாழ்வு சீராக இருந்தால்தான், நம் வாழ்வு நிறைவுள்ள வாழ்வாக இருக்கும். நம்முடைய வாழ்வில் இயேசுவை நம் இதயத் துடிப்பாக ஏற்று, அதற்கேற்றவாறு நம் வாழ்வை அமைக்கும் பொழுது நம் வாழ்விலே அருளையும் ஆசீரையும் வெற்றியையும் பெற முடியும்.
இயேசுவின் இதயம் ஆழமான அன்பைக் கொண்ட இதயம். எல்லோருக்கும் பொதுவான இதயம். தீயோரையும் அரவணைத்து நல்வழிப்படுத்தும் இதயம். மன்னிப்பையும் இரக்கத்தையும் கனிவையும் பொழியும் இதயம். நோயால் துன்பப்படுபவர்களைக் கண்டு அவர்களுக்கு உதவும் நல்ல இதயம். ஏழைக்கைம்பெண்ணை போல கடவுளுக்கு தன்னிடம் இருப்பதைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க நினைப்பவர்களைப் பாராட்டும் நல்ல இதயம். தீட்டு என்ற பெயரால் இந்த சமூகத்தை ஒடுக்குப்பவர்களை எச்சரிக்கும் இதயம். ஒடுக்கப்படுவர்களை அரவணைக்கும் இதயம். ஏழை எளிய மக்கள் மீது அன்பும் கருணையும் கொண்ட இதயம். இந்த உலக மக்களின் மீட்புக்காக சிலுவைச் சாவை ஏற்ற தியாகம் நிறைந்த இதயம். தன்னைத் துன்புறுத்துவோரையும் மன்னிக்கும் அன்பு இதயம். இப்படிப்பட்ட இதயம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிதானது. ஆனால் அதை வாழ்ந்து காட்டியவர் தான் கடவுளின் மகனாய் இருந்தும் நம்முடைய மீட்பிற்காக மனிதவுருவெடுத்த இயேசு. இயேசுவின் இதயம் எல்லோரையும் ஆழமாக அன்பு செய்யும் இதயம். இப்படிப்பட்ட இதயமாக நாமும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் விலாவைப் படைவீரர் குத்திய பொழுது இரத்தமும் தண்ணீரும் சேர்ந்து வழிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை நேரில் கண்ட அந்த படை வீரர்கள் தான் சாட்சி. தொடக்கத்தில் ஆதாமின் விலா கடவுளால் திறக்கப்பட்டது. அதன் வழியாகக் கடவுள் பெண்ணை உருவாக்கினார். புதிய ஆதாமாகிய இயேசுவின் விலாவானது மனிதனால் திறக்கப்பட்டது. இதன் வழியாக புதிய வாழ்வியல் கிறிஸ்தவம் தொடங்கப்பட்டது. இயேசுவின் விலாவிலிருந்து வழிந்தோடிய தண்ணீரும் இரத்தமும் இரக்கத்தையும் அருளையும் ஒவ்வொரு மனிதருக்கும் பொழிகின்றது. அந்த இரக்கத்தையும் அருளையும் நாமும் அனுபவித்து பிறரும் அனுபவிக்க நாம் ஒரு கருவியாக மாற வேண்டும்.
கொரோனா தீநுண்மியினால் எத்தனையோ மக்கள் துன்பப்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு இயேசுவின் மனநிலையில் இதயத்தின் ஆழத்திலிருந்து இரக்கத்தை உதவி செய்வதன் வழியாக காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும். "இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம் " என்று மனித சேவையில் புனிதம் கண்ட புனித அன்னைதெரசா கூறியுள்ளார். எனவே வாழ்கின்ற வாழ்வில் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றவர்களாய் இரக்கத்தோடு இயேசுவின் இதயங்களாகச் செயல்படுவோம். ஏழை எளிய நோயுற்ற ஒடுக்கப்பட்ட கைவிடப்பட்ட எல்லா மக்களுக்கும் மனிதநேயப் பணிகளைச் செய்ய முயற்சி செய்வோம். இதன் வழியாக இன்று நாம் கொண்டாடுகின்ற இயேசுவின் திரு இருதய பெருவிழாவுக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுப்போம்.
இறைவேண்டல் :
இரக்கத்தின் இதய ஆண்டவரே! உம் திருமகனைப் போல நாங்களும் இரக்கம் உள்ளவர்களாய் வாழ நல்ல இதயத்தை தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment