கடவுளின் திட்டத்தை யாராலும் தடுக்க இயலாது! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-இரண்டாம் வெள்ளி
I: திப: 5:34-42
II: தி.பா: 27 : 1. 4. 13-14 
III : யோவான் 6:1-15

 

இரு அருட்சகோதரிகள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுள் ஒருவர் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். மற்றொரு சகோதரி அவ்வருத்தத்திற்கான காரணத்தை வினவினார். தனக்கு சிறுவயதிலிருந்தே ஆசிரியப்பணி புரிய வேண்டுமென ஆசையிருந்ததாகவும் ஆனால் தற்போது சமூகப்பணி செய்வதற்கான படிப்பிற்காகத் தான் அனுப்பப்படுவதாகவும் தனக்கு சற்றே குழப்பமாக இருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு சகோதரி "கடவுளிடம் இருவரும் ஜெபிப்போம். அவருடைய திட்டம் இதுதான் என்றால் அது நல்லபடியாக நடக்கும். அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவர் தருவார். இல்லாவிட்டால் அது தானாகவே மறைந்து விடும் "என்று கூறி அச்சகோதரிக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தினார்.

ஆம் நண்பர்களே நம் வாழ்வில் நடக்கும் அனைத்துமே இறைவனின் திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது என திருப்பாடல் 139 ல் நாம் வாசிக்கிறோம். இறைவனுடைய திட்டம் எதுவாயினும் அது நிச்சயம் நிறைவேறும். அவரிடமிருந்து தொடங்கப்பட்ட எந்த காரியமும் இடைநிற்காது. இன்றைய முதல் வாசகத்தில் இத்தகைய ஒரு தெளிவை கமாலியேல் தலைகுருக்களுக்கு வழங்குகிறார். திருத்தூதர்களை இயேசுவின் பெயரால்  போதிக்கக் கூடாது என்று எச்சரித்த யூதர்களுக்கு பல உதாரணங்களைக் காட்டி "அவர்கள் செய்யும் காரியம் மனிதர்களால் மட்டுமே என்றால் மறைந்து போகும் எனவும், கடவுளே இக்காரியத்திற்கு காரணமானால் நிலைத்திருக்கும் எனவும் கூறினார். மேலும் கடவுளை எத்திர்த்துப் போராடி நம்மால் வெற்றிபெற இயலாது எனவும் விளக்குகிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு அப்பம் பலுகச் செய்து பெருந்திரளான மக்களுக்கு உணவளிக்கிறார். அது கடவுளின் திட்டமாக இருந்ததால்தான் தங்களிடம் பணமில்லை, மக்களை அனுப்பிவிடலாம் என சீடர்கள் இயேசுவிடம் கூறிய போதும் அவர் தயங்காமல் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினார்.

நம் வாழ்வில் பலமுறை இறைவனின் விருப்பத்திற்கு மாறாக நமது விருப்பம் நிறைவேற வேண்டும் என்ற ஆவலில் பல முயற்சிகளை நாம் செய்தாலும் அவை தோல்வியில் முடிகின்றன. கடவுளோடு நம்மால் போராட முடியாது. அவருடைய விருப்பத்தை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். அதேபோல இறைவிருப்பத்திற்கேற்ப நற்செயல்கள் புரிபவர்களை தடுக்காமல் ஆதரிப்போம்.

இறைவேண்டல்

இறைவா உமக்கெதிராகப் போராடுபவர்களாக இல்லாமல் உம் திட்டத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட உதவி புரியும். ஆமென்.

Add new comment

10 + 8 =