Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம்பிக்கையால் ஒன்றிணைவோமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-இரண்டாம் செவ்வாய்
I : திப: 4:32-37
II: தி.பா: 93: 1ab. 1c-2.
III : யோவான் 3:7-15
நம்பிக்கையால் ஒன்றிணைவோமா!
நண்பர்கள் நான்கு பேர் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாகச் சந்தித்து தங்கள் வாழ்க்கைச் சுவாரசியங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். தங்களின் வேலைப் பளு,குடும்பம், முன்னேற்றங்கள், சறுக்கல்கள் இவற்றையெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர்கள் தங்களின் கடந்தகாலத்தின் மகிழ்வான தருணங்களைப் பின்னோக்கிப் பார்த்தனர். சிறுவயதில் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்டது,விளையாடியது,படித்தது, இன்ப துன்ப நேரங்களில் உடனிருந்தது போன்றவற்றையெல்லாம் நினைக்கும் போது மகிழ்ச்சியான உணர்வுகள் ஏற்படுவதாகப் பகிர்ந்து கொண்டனர். நாம் நமது என்னும் போது உள்ள மகிழ்ச்சி நான் எனது என்று ஆனவுடன் இல்லாமல் போனதை எண்ணி வருந்தினர். ஒற்றுமையுடன் வாழ்வதே இன்பம் என்று தங்கள் வாழ்வின் அனுபவங்களைப் பகிர்ந்து மீண்டும் ஒன்றிணைந்தனர்.
ஒற்றுமையுடன் வாழ்வது எளிதான காரியமல்ல. அங்கே ஒருவர் மீது ஒருவர் அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். புரிதல்,பகிர்தல், உடனிருத்தல் அனைத்தும் மிக அவசியம். அவை நம்மை ஒரு குடும்பமாகச் சேர்க்கும். இப்படிப்பட்ட வாழ்வைத்தான் தொடக்க கால கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக நாம் திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம்.
திருஅவை தொடங்கப்பட்ட காலத்தில் உயிர்த்த இயேசுவிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அவர்களை ஒன்றிணைத்தது. உடைமைகளைப் பொதுவாக்கினர். தேவையில் உழல்வோர் என யாரும் இல்லை என வாசிக்கிறோம்.
ஆனால் இன்று நமது திருஅவை அவ்வாறு உள்ளதா என ஒப்பிட்டுப்பார்த்தால் இல்லை என்ற பதிலையே நாம் கூறஇயலும். திருஅவையிலும் கூட நான் எனது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. சாதியின் பெயரில் பிளவுகள் தலைவிரித்து ஆடுகின்றன. கடமைக்கு கோவிலுக்கு வந்துவிட்டு அருகிலுள்ளவர்களிடம் சிரித்த முகத்துடன் வணக்கம் கூட சொல்ல நேரமில்லா வாழ்க்கைதான் நாம் வாழுகிறோம். தேவையில் இருப்பவர்களுக்கு நம்மிடம் இருப்பவற்றில் சிறிதளவு கொடுக்கக்கூட மனமில்லை. இப்படி இருந்தால் நமது நம்பிக்கையும் கேள்விக்குறி தான்.
இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மை மறுபடியும் நாம் பிறக்க வேண்டுமெனக் கூறுகிறார். நாம் பிளவுகள், வேற்றுமைகள், சுயநலம் ஆகியவற்றை துறந்து புதிய மனிதர்களாய் மாற வேண்டும்.நம்பிக்கையில் திடம் பெற வேண்டும். அப்போது திருஅவையும் புதிதாய் பிறப்பெடுக்கும். நம்பிக்கையால் ஒன்றிணையும்.
இறைவேண்டல்
திருஅவையின் தலைவரே இறைவா நாங்கள் நம்பிக்கையுடன் ஒன்றிணைய எங்களை புதுப்பிறப்படைந்தவர்களாய் மாற்றும். ஆமென்
Add new comment