சுமைகள் சுகங்களாக | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (07.08.2020) - பொதுக்காலத்தின் 18 ஆம் வெள்ளி- I.  நாகூ: 1: 15; 2: 2; 3: 1-3,6-7; II. திபா. இச 32: 35-36. 39. 41; III. மத்: 16: 24-28

"சுமைகள் சுகங்களாக!"

நான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தங்கச்சிமடம் புனித தெரசம்மாள் ஆலயத்தில் மூன்று மாதங்கள்  களப்பணி அனுபவத்தை பெற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் வீடுகளை சந்தித்தபோது, ஒரு குடும்பத்தை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த குடும்பத்தில் ஒரு தாயானவள் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனதை உலுக்கும் செய்தி என்னவென்றால், அந்த மூன்று பிள்ளைகளுமே மூளை வளர்ச்சி இல்லாதவர்கள். மூவருமே வளர்ந்து இருபது வயதைத் தாண்டிய போதிலும் ,அவர்களுடைய எல்லா தேவைகளையும் தாய்தான் நிறைவேற்றவேண்டும். அதைப்பார்த்ததும் என் மனதில் ஒரு வகையான வேதனை நிறைந்தது . அப்பொழுது நான் அவர்களிடம் "எப்படியம்மா? ஒரு குழந்தை இப்படி இருந்தாலே சிரமம். ஆனால் நீங்கள் இந்த மூன்று குழந்தைகளையும் எப்படி பார்த்துக் கொள்ள முடிகின்றது? " என்று கேட்டேன். மனது நிறைய வேதனை இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு அந்த தாய் சொன்ன பதில் என்ன தெரியுமா ?.  "இவர்களை சுமக்க நான்தான் தகுதியானவள் என கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் .உயிருள்ள வரை நான் அவர்களை சுமப்பேன். எனக்காகவும் எனது பிள்ளைகளுக்காகவும் தொடர்ந்து வேண்டிக்கொள்ளுங்கள் " என்று கூறியது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மனநிலைக்கு ஒத்ததாக இருந்தது.

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது இயேசுவின் மனநிலை கொண்டவர்களாய் பிறருடைய சுமைகளை சுமக்க முன் வருவதாகும். "என்னை பின்செல்ல விரும்புகிறவன் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்ற அழைப்பினை இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஆண்டவர் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். 

"கருவைச் சுமக்கத் தயங்கினால் பெண் தாயாக முடியாது. 
மலரைச் சுமக்க தயங்கினால் செடிக்கு அழகு கிடைக்காது.
புத்தகத்தைச் சுமக்க தயங்கினால் மாணவரின் அறிவு பெருகாது.
தலைவன் குடும்ப பாரத்தைச் சுமக்க தயங்கினால் அவன் குடும்பம் செழிக்காது"  என்ற புதுக்கவிதை சுமைகளை ஏற்று வாழ்வதுதான் உண்மையான சுகத்தை கொடுக்கும் என்ற மனநிலையை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்முடைய சுமையில் எல்லாம் ஏற்றுக்கொண்டு நான் மீட்பு அடையும் பொழுது சுகம் காண்பவராக இருக்கின்றார். சிலுவை என்றவுடன் நாம் ஏதோ பெரிய பாரச்சிலுவையைக் கற்பனைச் செய்யத் தேவையில்லை. நம்முடைய அன்றாட வாழ்வில் வருகின்ற சுமைகளை ஆண்டவர் இயேசுவின் மனநிலையோடு சுமக்க அழைக்கப்பட்டுள்ளோம்.  பல நேரங்களில் நம் வாழ்வில் உடல் நலக்குறைபாடுகள், நம்முடைய பலவீனங்கள், அன்புச் செய்யப்படாமை, முயற்சியில் தோல்வி, பிறரின் விமர்சனங்கள், கடன் தொல்லைகள்,வேலையின்மை,  பசி, மனதில் அமைதியின்மை போன்ற சுமைகள் நம்மை அழுத்தலாம். ஆனால் அது சுமைகளை கண்டு துவண்டுவிடாமல் துணிவோடு எதிர்கொண்டு சுகமான வாழ்வு பெற நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.   நம் வாழ்வில் வருகின்ற எல்லா சுமைகளுமே சுகமானதேயாகும். அவற்றை இயேசுவின் மனநிலையோடு நாமும் பிறரும் வாழ்வு பெற சுகமாக நினைத்து சுமக்கும் பொழுது நாம் வாழ்விலேயே ஆண்டவர் இயேசுவைப் போல ஆனந்தத்தைக் காணமுடியும்.  இப்படிப்பட்ட மனநிலை தான் உண்மையான சீடத்துவ வாழ்வு.

நம் ஆண்டவர் இயேசு இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையுங்கள் எனக் கூறுகிறார். இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் இடுக்கமான வழி என்பது தூய்மைக்கு வழிகாட்டக்கூடிய பாதை. அகன்ற பாதை என்பது பாவத்திற்கு வழிகாட்டக்கூடிய பாதை. தூய வாழ்வு வாழ்வது சுமையாக தான் இருக்கும். ஆனால் அதில் தான் உண்மையான சுகம் அடங்கியுள்ளது. பாவ வாழ்வு வாழ்வது சுகமாக இருக்கும். ஆனால் அது இறுதியில் சுமையான வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.  எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே கொரோனா என்ற தீநுண்மியின் காரணமாக பல்வேறு சுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பசி, வறுமை, கடன் பிரச்சனை, மன உளைச்சல், சிறைப்பட்ட சூழல், மாணவர்களின் எதிர்காலம் பரிதாப நிலை போன்ற பல்வேறு சுமைகள் நம்மை அழுத்திக் கொண்டிருந்தாலும் துணிவோடும் இறை நம்பிக்கையோடும்  இயேசுவின் மனநிலையோடும் ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக நம்முடைய உயிருள்ள கடவுள் நம் சுமைகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் கொடுப்பார். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நம்முடைய சுமைகளை எல்லாம் சுகமாக மாற்றுவார். இஸ்ரயேல் மக்கள்  எகிப்திலே அடிமைத்தனத்தின் வழியாக சுமைகளால் வருந்திக் கொண்டிருந்த பொழுது, யாவே இறைவன்    அவர்களின் கண்ணீரையும் கூக்குரலையும் கேட்டவராய் மோசேயின் வழியாக விடுதலையை வழங்கினார். இப்படிப்பட்ட உள்ளம் தான் நம் தந்தையாகிய கடவுளின் உள்ளம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் நோயாலும் சட்டத்தாலும் வருந்திய அவர் காலத்து மக்களுக்கு சுகமான வாழ்வை போதனைகளின் வழியாகவும் வல்லச் செயல்களின் வழியாகவும் வழங்கினார். எனவே இன்றைய நாளிலே சுமைகள் வேண்டாம் என்ற மனநிலையை விட்டுவிட்டு சுமைகளைத் துணிவோடு ஏற்றுக்கொண்டு இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கும் இயேசுவின் உண்மையானச் சீடத்துவ வாழ்வுக்கும் சான்று பகர தேவையான ஞானத்தை இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல் :
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே , எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் " என்று கூறிய ஆண்டவர் இயேசுவே எங்கள் சுமைகளை கண்டு துவண்டுவிடாமல் நீர் எங்கள் சுமைகளை அகற்றுவீர்  என்ற நம்பிக்கையோடு எங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர தேவையான அருளைத் தரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 18 =