Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாவீதைப் போல ஜெபிப்போமா?
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும் - திருப்பாடல்கள் 51:2. பாவத்தை குறித்து தாவீது ராஜா உணர்ந்து அழுது செபிக்கும் செபமே இந்த திருப்பாடலாகும். பாவம் நம்மை கடவுளிடமிருந்து பிரித்து விடும். பாவம் நாம் மறைத்தாலும் நம் உள்ளத்தில் இருந்து உணர்த்தி கொண்டே நம்மை வலிமை இழக்கசெய்யும்.
தாவீது ராஜா உரியாவுக்கு விரோதமாய் பாவம் செய்கிறார். கடவுள் கொடுத்த தன் சொந்த உடலுக்கு எதிராக பாவம் செய்கிறார். செய்த பாவத்தை மறைக்க நினைத்து உரியாவை கொன்றுவிடுகிறார். ஆனால் ஆண்டவருடைய கண்களுக்கு மறைவானது எதுவுமில்லை. ஆண்டவரோ நாத்தான் இறைவாக்கினர் மூலமாக தாவீதுக்கு பாவத்தை உணர்த்துகிறார். தாவீது மனம் நொந்து அழுகிறார். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும் என்று சொல்லி அழுகிறார். ஆண்டவரும் பாவத்திற்கான தண்டனையை கொடுத்து தாவீதை மன்னிகிறார்.
நம் கடவுள் விரும்புவது நொருங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தையே. குற்றமுணர்ந்த உள்ளத்தை ஆண்டவர் அவமதிப்பதில்லை. எனவே நாம் செய்த எல்லா பாவத்தையும் அறிக்கையிட்டு இந்த மனம் திரும்புதலின் நாட்களில் ஆண்டவரிடம் திரும்புவோம் . அவருடைய ஆசீரை பெற்று கொள்வோம்.
செபம்: ஆண்டவரே உமக்கு எதிராக நாங்கள் பாவம் செய்தோம். உம் பார்வையில் தீயது செய்தோம். எங்கள் குற்றங்களை நாங்கள் உணர்கிறோம்; எங்கள் பாவம் எப்போதும் மனக்கண்முன் நிற்கின்றது. எங்களை கழுவியருளும் தூய்மையாக்கும் உறைபனியிலும் வெண்மையாக்கும். மகிழ்வொலியும் களிப்போசையும் நாங்கள் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய எங்கள் எலும்புகள் மகிழ பண்ணியருளும். ஆமென்.
Add new comment