Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பின் பணியும் பரிசுத்தமே
நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர் - லேவியர் 11:44. நமது வாழ்க்கையில் பரிசுத்தம் முக்கியமானது. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கடவுளை காண முடியாது. விண்ணகத்துக்குள் நுழையவும் முடியாது. ஆண்டவர் சொல்கிறார் நான் தூயவராக இருப்பது போல, நீங்களும் எல்லாவற்றிலும் தூயவராயிருங்கள்.
தூய்மை என்றால், வெளிப்புறத்தை சுத்தமாக்குவது மட்டுமல்ல. ஆண்டவர் எதிர்பார்க்கிற தூய்மை ஆழமான பரிசுத்தம். உள்ளம் மறுரூபமாகிற மேன்மையான அனுபவம். இதை நம்மில் அநேகர் புரிந்து கொள்ளுவதில்லை. பரிசுத்தமாய் ஜீவிப்பது என்றால், பவுடர் போடக்கூடாது, தலை சீவக்கூடாது, நன்றாக உடுத்தக் கூடாது, என்பதல்ல. பரிசுத்தம் என்பது உள்ளத்தில் தூய்மையும், வாழ்க்கையில் இயேசுவின் பிரதிபலிப்பையும் கொண்டிருப்பது ஆகும்.
இயேசுவின் காலத்தில் பரிசேயர், சதுசேயர் வெளிப்பிரகாரமான பரிசுத்தத்தில்தான் கவனம் வைத்தார்களே தவிர, உள்ளத்தின் ஆழத்தில் பெற வேண்டிய தூய்மையைக்குறித்து அவர்கள் அசட்டை பண்ணவில்லை. ஆண்டவர் அவர்களை பார்த்து “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன என்று கூறுகிறார். நாம் முழுமனதாக பரிசுத்தபாதையில் நடக்கத் தீர்மானித்தால், கடவுள் நிச்சயமாகவே உதவி செய்வார். அவர் வழி காட்டுவார். அவருடைய வார்த்தைகளை பின்பற்றுகிற நாம், அவர் நடந்தபடியே நடக்க வேண்டும்.
செபம்: ஆண்டவரே, நீர் விரும்புகிற தூய வாழ்வை நாங்களும் வாழ விரும்புகிறோம். பலகீனமான நாங்கள், உள்ளத்தில் உறுதியோடு உம்மை பின்பற்ற அருள் தாரும். எங்கள் பாவங்களை மன்னித்து இனிமேல் தூய வாழ்வு வாழ்ந்து உம்மை முகமுகமாக பார்க்கும் அருளைதாரும். ஆசீர்வதியும். ஆமென்.
Add new comment