Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பொங்கி வருதல் (நன்றி, அறம், அன்பு, உறவு, உடனிருப்பு பொங்கிவர)
2000 ஆண்டுகளுக்கும் மேலான, பழமை வாய்ந்த, தமிழர் திருநாள்கள் இப்பொங்கல் திருநாள்கள். ஆன்டிரியா குட்டிரஸ் என்ற வரலாற்று முனைவர் பொங்கல் விழா முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தது என்று கூறுகிறார். இருந்தபோதிலும் அதற்கு முன்னதாகவே இது முழுமைபெறாத வடிவில் தமிழ்பண்பாட்டில் இரண்டறக் கலந்ததொன்றாக இருந்திருக்கலாம் என்னும் கருத்தினையும் சில தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழன் உலக மானுட வரலாற்றுக்கு அறம் சேர்த்தவன். வாழ்க்கையை அனுபவித்துவாழக் கற்றுக் கொடுத்தவன். தன்னைப் படைத்தவனை நன்றியோடு நோக்கும்; உயர்பண்பினை உலகுக்குக் கொடுத்தவன்;, தனக்கு உறுதுணையாக இருக்கும் பொருள்கள், உயிரினங்கள் அனைத்தையும் தன்னுயிர்போல மதித்துப் போற்ற உலகுக்குக் கற்றுக்கொடுத்தவன். விழாக்கள் எடுத்து உறவுகளைச் சேர்த்து, உரிமைகளைப் புதுப்பித்து, உரசல்களையும் பூசல்களையும் புடமிட்டு எரித்து புதுப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைளைகளை வாழ்ந்துகாட்டியவன். இவற்றை உலகுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துவதற்காக அவன் உருவாக்கிய நினைவுப் பெட்டகங்கள்;தான் இந்த நான்கு நாட்கள் தமிழர் திருவிழாக்கள்.
இவ்விழாக்களின் சிறப்பு:
• பழையனக் களைந்து, புதியன நோக்கிப் பயணிக்க கற்றுக்கொடுக்கும் போகி பொங்கல்.
• அறுவடையின் ஆண்டவனுக்கு நினைத்து, உள்ளம் பொங்க நன்றிகூறுவதற்காக தைப் பொங்கல்.
• மொழிகளுக்கெல்லாம் முதன்மையான மொழி தழிழ்மொழி என்பதை உலகுக்கு உணர்த்தி, அதை ஆராய்வதற்காக இன்றும் பல்வேறு அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கும் செம்மையான மொழி, செம்மொழி தமிழ். அதன் தொடக்கமே உலகத்தின் தொடக்கம் என்பதை உணர்த்த தமிழ்ப் புத்தாண்டு.
• பிற உயிர்களைத் தன்னுயிர் பேல மதித்துப்போற்றுவதற்காக மாட்டுப் பொங்கல்.
• உலகம் போற்றும் அறத்தைக் கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் ஞானி, தமிழப் பொருமான் திருவள்ளுவனின் திருக்குறளின்வழி மானுடத்தை வளப்படுத்த வழிகாட்டும் திருவள்ளுவர் தினம்.
• உறவுகளைப் போற்றுவதற்கும், சந்திப்பதற்கும், பெரியவர்களின் ஆசியைப் பெறுவதற்காகக் கற்றுக்கொடுக்கும் காணும் பொங்கல்.
இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் மார்தட்டிக் கொண்டாடப்படும் விழாதான் இந்த தமிழர் திருநாள்கள். அனைவருக்கும் அறிந்தவிதத்தில் இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மௌரிட்டியஸ், ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் சிறப்பாக அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.
மண்பானைச் சமையல் கலாச்சாரத்தை நோக்கி மீண்டும் பயணிக்கும் நம்முடைய தலைமுறைக்கு பொங்கல் விழா ஒரு வழிகாட்டுதல். ஏனென்றால் பொங்கல் என்றாலே அது மண்பானையில்தான் சமைக்கப்படுகிறது. மண்பானை சமையலின் ஆரோக்கியத்தை எப்பொழுதே உலகுக்கு எடுத்துக்காட்டியது நம்முடைய பொங்கல் விழா.
தமிழன் என்று சொல்லூடா தலைநிமிர்ந்து நில்லூடா என்று முழக்கமிடுவதற்கு முன்னோட்டமாக தமிழனின் அறத்தையும், நன்றியறிதலையும், பிறஉயிர்களிடையே உறவையும், நட்புப் பாராட்டுதலையும் வாழந்துகாட்டி மீண்டும் சொல்வோம்.
தமிழன் என்று சொல்லூடா! தலைநிமிர்ந்து நில்லூடா!!
Add new comment