அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன். உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர் - திருப்பாடல்கள் 119:92-93. ஆண்டவருடைய வார்த்தை. நம்மை ஆறுதல் படுத்துகிறது. நம்மை குணமாக்குகிறது. நமக்கு சந்தோசம் தருகிறது. நம்மை நல்வழி படுத்துகிறது. நம்மை வாழ்விக்கிறது.

அந்த வார்த்தை தான் ஆதியிலே இருந்தது. அது கடவுளோடு இருந்தது. அது கடவுளாயும் இருந்தது. அந்த வார்த்தை தான் மனு உரு எடுத்து நம்மிடையே குடிகொண்டது. இயேசு பெரும்பாடுள்ள பெண்ணை பார்த்து சொன்ன உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ என்ற வார்த்தை அந்த பெண்ணுக்கு உடல் நலமும் சமாதானமும் கொடுத்தது. 

இயேசு பாவியான பெண்ணை நோக்கி, சொன்ன  உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன்  போ  என்ற வார்த்தை தான் அந்த பெண்ணை பாவத்திலிருந்து விடுவித்தது. இயேசு சக்கேயுவை பார்த்து  இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே என்ற வார்த்தைதான் அவருக்கு மீட்பை கொடுத்தது. இயேசு பேதுருவை பார்த்து நீ பாறை இந்த பாறையின் மேல் என் திருச்சபையை கட்டுவேன் என்ற வார்த்தை தான் இன்றைய திருச்சபைக்கு ஆணிவேராய் அமைந்தது. 

ஆண்டவருடைய வார்த்தை இருபுறமும் கூர்மையான வாள் போன்றது. நம்மை வாழ வைக்கிறது துன்பத்தில் அவருடைய  வார்த்தைகள் ஆறுதல் தரும் . வாழ்வளிக்கும்.

ஜெபம்: வார்த்தையாம் இறைவா. உம்மை வணங்குகிறோம். உமது  வார்த்தையை அனுப்பி எங்களுக்கு நலம் தருவதற்காக  நன்றி.  எங்கள் பாவங்களை  எங்களை விட்டு அகற்றி எங்களை நேர்வழி நடத்துவதற்காக நன்றி. எங்கள் பாதைக்கு உமது வசனமே தீபமாக இருப்பதற்காக நன்றி. வார்த்தை மனு உரு ஆனவரே எங்களோடு இரும்.  ஆமென்.

Add new comment

11 + 0 =