Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
Archangels Day
அதிதூதர்களான தூய மிக்கேல் கபிரியேல் ரபேல் (செப்டம்பர் 29). வானதூதர்கள் கடவுளின் திருமுன் நின்று எப்போதும் அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பவர்கள்; அவர்கள் கடவுள் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றக் கூடியவர்கள்; தீமைக்கெதிரான போராட்டத்தில் நம்மோடு உடன் இருப்பவர்கள். மிக முக்கியமான பணிகளைச் செய்ய அதிதூதர்கள் எழுவர் உள்ளனர். அந்த ஏழு அதிதூதர்களில் மூவரின் பெருவிழாவை இன்று திருச்சபையானது கொண்டாடுகிறது.
மிக்கேல்
மிக்கேல் என்றால் ‘கடவுளுக்கு நிகர் யார்?’ என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் மிக்கேல் இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருந்து, எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் (தானி 10:13, 12:1). தூய யூதா புத்தகத்தில், மிக்கேல் சாத்தானோடு மோசேயின் இறந்த உடலைக் குறித்து வாதிடுவதையும், அப்போதும் சாத்தான் மோசேயின் உடலை புதைக்கவேண்டும் என்று சொல்ல, மிக்கேல் அதனைக் கடிந்துகொள்வதையும் குறித்து வாசிக்கின்றோம் (யூதா 1:8,9).
விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள் என திருவெளிப்பாடு (12:7) நூலில் மிக்கேல் சாத்தானோடு போரிட்டு வெல்வதைக் குறித்து வாசிக்கின்றோம்.
கபிரியேல்
கபிரியேல் என்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் என்று அர்த்தமாகும். தானியேல் புத்தகத்தில் கபிரியேல் தூதர் தானியேலுக்குத் தோன்றி அவர் கண்ட காட்சியின் உட்பொருளை விளக்கிக் கூறுகின்றார் (தானி 9:21). லூக்கா நற்செய்தியில் சக்கரியாவிற்கும், மரியாவிற்கும் தோன்றி முறையே திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் இயேசுவின் பிறப்பையும் குறித்து எடுத்துச் சொல்கிறார் - லூக்கா 1:19, 1:26. கபிரியல் தூதர் ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை செய்து வருகிறார்.
ரபேல்
மூன்றாம் அதிதூதரான ரபேல் என்பதற்கு ‘ஆண்டவர் குணப்படுத்துகிறார்’ என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து நாம் தோபித்து புத்தகம் முழுவதும் வாசிக்கின்றோம். மிதியா நோக்கிய பயணத்தில் தோபித்தோடு ஒரு வழிபோக்கரைப் போன்று பயணித்து, கொடிய மீனிடமிருந்து அவரைக் காப்பாற்றி, தோபித்து மணந்துகொள்ள இருந்த சாராவிடமிருந்து தீய ஆவியை விரட்டி, இறுதியாக தோபித்துவின் தந்தை தொபியாசுகு பார்வை கொடுக்கிறார் இந்த ரபேல் அதிதூதர். தனக்குப் பணிக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, ரபேல் அதிதூதர் அவர்களிடம், “நான் இரபேல்! ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வான தூதர்களுள் ஒருவர்” என்று தன்னை வெளிப்படுத்துகிறார் (தோபி 12:15).
இவர்களுடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவர்களைப் போன்று தீமையை எதிர்த்து போரிடுபவர்களாக இருக்கவேண்டும். லஞ்சம், ஊழல், சாதி, வன்முறை, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு போன்றே பல்வேறு தீமைகளை நாம் துணிவோடு எதிர்த்துப் போராடி, கடவுளுக்குத் தொண்டு செய்து வாழ்வோம், தீமைக்கெதிராக போராடி எப்போதும் நாம் இறைவன் பக்கம் நிற்போம். வெற்றி காண்போம். இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
ஜெபம்: ஆண்டவரே இந்த நாளில் அதிதூதற்களின் உதவியோடு தீமைகளை எதிர்த்து நிற்கும் வல்லமையையும் ஆற்றலையும் எங்களுக்கு தாரும். பசாசை மேற்கொள்ள அதன் செயல்களை எங்களிடமிருந்து அழிக்க வரம் தாரும்.
Add new comment