அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம் - 1 தெசலோனிக்கர் 4:3. ஆண்டவர் நாம் தூயோராக வாழ்வதையே விரும்புகிறார். நல்லவராக வாழ்பவர் எல்லாம் தூயோர் என்று சொல்ல முடியாது. தூயோர் என்பது அதற்கும் மேலான ஒன்று. நல்லவர் என்பதும் தூயவர் என்பதும் வேறு வேறு. கடவுளோடு இணைந்து தூய ஆன்மாவோடு வாழ்வது தூய வாழ்வு.  அது  கடவுளுடைய விருப்பம் அறிந்து வாழ்கின்ற வாழ்வு.

நல்லவர் ஒருவர் இயேசுவிடம் வந்து திரு சட்டங்கள் எல்லாம் சிறு வயது முதல் பின்பற்றுகிறேன் என்கிறார். அவர் மனித கண்களில் நல்லவர். ஆனால் இயேசு உனக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு என்னைப் பின் பற்று என்றவுடன் அவர் அதற்கு கீழ்படியவில்லை.  தூயோவராக வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஆண்டவர் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். அன்னை மரியாள் தன்னை முற்றிலும் உடலாலும  உள்ளத்தாலும் ஆண்டவருக்கு ஒப்பு கொடுத்தார். அதன் வழியே நிறைய புனிதர்கள் வாழ்ந்தார்கள். 

நம் வாழ்வில் இயேசுவை பிரதிபலிக்க வேண்டும்.உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும். நம் எண்ணங்கள் மட்டில், வாழ்வு நிலை மட்டில், அவ்வப்போது ஆய்வு செய்து விழிப்போடு இருப்பது நல்லது. அப்படிப்பட்ட பரிபூரணமான தூய வாழ்வுக்கு ஆண்டவர் நம்மை அழைப்பு விடுக்கிறார். அதுவே அவருடைய விருப்பம். 

ஜெபம்: ஆண்டவரே எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை அன்பு செய்யவும். தன்னை தான் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்து அனைத்திலும்  தூயவராக நாங்கள் வாழ அருள் தாரும்.

Add new comment

13 + 5 =