அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் - யோவான் 10:14. ஆயன் என்பவன் ஆடுகளோடு இருப்பான். அவற்றை தனியே விட்டு செல்லமாட்டான். சின்ன சத்தம் கேட்டாலும், தன் ஆடுகளுக்கு எதுவும்  ஆபத்து வந்து விடுமோவென்று குரல் கொடுத்து எச்சரிப்பான். ஆடுகளும் அவன் குரலுக்கு கீழ்படியும்.  

அவற்றை புல்லுள்ள  மேய்ச்சலான இடங்களுக்கு அழைத்துச் சென்று இரை தேடச்செய்வான்.  நீருள்ள இடங்களுக்கு கூட்டி செல்வான். அவை வழி மாறி சென்றால் தன் தடியை வைத்து, அல்லது குரல் கொடுத்து அவற்றை மந்தைக்குள் கூப்பிடுவான். ஒரு நாளும் அவன் நன்றாக  தூங்ககூடமாட்டான். ஏதாவது ஆட்டுக்கு நடக்க முடியவில்லை என்றால் அதை தோளில் சுமந்து கொள்வான்.

அதுபோலவே நம் ஆண்டவரும் இருக்கிறார். நமக்கு என்ன தேவை என அறிந்து நமக்கு செய்கிறார். நம்மை காக்கும் கடவுள் உறங்குவதும் இல்லை ஓய்வு எடுப்பதும் இல்லை. அவர் நம்மை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். 

நாம் அவரது குரலுக்கு செவி கொடுத்தால் நிச்சயமாக அவரது மந்தையில் அவரது பாதுகாப்பையும் அவரது அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிப்போம். 

ஜெபம்: நல்ல ஆயனாகிய ஆண்டவரே உமது மேலான அன்புக்குக்கு நன்றி. நாங்கள் என்றும் உமது மந்தையில் உமது அன்பிற்குரிய ஆடாக  உம் பாதுகாப்பில்,  உம் குரலுக்கு செவி கொடுத்து வாழ  அருள்தாரும்.

Add new comment

2 + 12 =