அருளாளர் பவுலோ மண்ணா

யார் இவர்: அருளாளர் பவுலோ மண்ணா 1872, ஜனவரி 16, இத்தாலியில் அவலினோ என்ற இடத்தில் பிறந்தார். உரோமை நகர் கிரகோரியன் பல்கலை கழகத்தில் தனது தத்துவயியலைப் பயின்று கொண்டிருந்தபோது, இறையழைத்தல் பெற்றார். வெளிநாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான நிறுவனத்தில் சேர்ந்து, மிலான் நகரில் 1894 மே 19 இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் தனது நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக பர்மாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். தனது உடல்நிலை மோசமாக இருந்தாலும், மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டார். கரியன் என்ற மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதிலும், அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் முனைந்தார். 

அவர் மிகவும் நோய்வாய்ப்படவே 1907 ஜீலை 7 இல் மீண்டும் தாயகம் திரும்பினார். இத்தாலியில் தன்னுடைய திறமைகள் அனைத்தையும் திருஅவையின் பணிக்காக முழுமையாக செலவழித்தார். 

இவர் 1952, செப்டம்பர் 15 இல் நேப்பல்சில் இறந்தார். திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் நவம்பர் 4, 2011 அன்று அருளாளர் நிலைக்கு இவரை உயர்த்தினார்.

அவருக்கு என்ன சிறப்பு?

திருஅவை முழுவதும் உலகம் முழுவதற்கே என்பது அவருடைய தாரக மந்திரமாக இருந்தது. திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் சவால்கள் பிரச்சனைகள் பற்றிய அவருடைய எழுத்துகளை படித்தவர்கள் இவற்றை இறைவாக்கினர்களின் எழுத்துக்கள் என்று கூறினார்கள்.

நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக செபங்கள், துண்டுதாள்கள், புத்தகங்கள், கட்டுரைகள் போன்றவற்றை தயாரித்து வெளியிட்டார். நற்செய்தி அறிவிப்புப் பணி ஒத்துழைப்பில் புதிய முயற்சிகளை மேற்கொண்டார். நற்செய்தி அறிவிப்புப் பணிப்பற்றிய பருவ இதழை குடும்பங்களுக்கும், இளைஞர்களுக்கும் தனித்தனியாக வெளியிட்டார். 

இவரின் வாழ்க்கையில் கடவுளின் மாட்சியைக் காணலாம். அவருடைய வாழ்க்கை முழுவதையும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்காகச் செலவழித்தார். அவருடைய எழுத்துகளின் ஒவ்வொரு பகுதியும் இயேசு கிறிஸ்துவை உயிருள்ள, நம்முடைய வாழ்வு மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணியின் மையமாகவே காண்பிக்கிறார்.

1915 ஆம் ஆண்டு குருக்களின் நற்செய்தி அறிவிப்பு ஒன்றியம் (PUM - Missionary Union of Clergy) ஆரம்பித்தார். இது பல தடைகளுக்குபின் கத்தோலிக்க உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் அமைக்கப்படவேண்டும் என திருஅவை பணித்தது. இவர் PUM சபையின் தலைவராகப் பணியாற்றினார். 

நாம் எப்படி போதிப்பது என்பதை தெரிந்துகொள்வதைவிட, எப்படி செபிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது மேலானது என்று வலியுறுத்திக்கூறினார். யாரெல்லாம் செபத்தில் கடவுளோடு நெருங்கிய உறவில் இருக்கிறார்களோ, அவர்கள் இறைவனை எல்லா ஆன்மாக்களிலும் ஊடுருவச் செய்யலாம் எனக் கூறுகிறார். 

நாம் என்ன செய்ய முடியும்?

செபத்தின் வழியாக நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க, மற்றவர்கள் வாழ்வில் கிறிஸ்துவை ஊடுருவச் செய்ய...

மேலும் கூடுதல் தகவல்களை: www.tami.rvasia.org  என்னும் இணையதள முகவரியில் காணலாம்.
 

Add new comment

3 + 15 =