எக்கணமும் அவர் நம்மோடு

இறந்தவர் உயிரோடு வெளியேவந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார் - யோவான் 11:44. இலாசருடைய உடல் நாற்றமெடுக்கிறது. முகம் மூடப்பட்டுள்ளது.  அவருடைய கை கால்கள் கட்டப்பட்டிருந்தது.  ஆண்டவர் அவரை வெளியே வர சொல்கிறார். இலாசர் உயிர் பெற்று எழுந்து வருகிறார். அவருடைய கட்டுகள் அவிழ்க்கப்பட்டு முகத்திரை அகற்றப்படுகிறது.

நாமும் பாவத்தினால் இறந்தவர்களாய் அழுகி நாற்றம் எடுத்தவர்களாக இருக்கிறோம். ஆண்டவர் நம்மை பார்த்து பாவமென்னும் கல்லறைகளை விட்டுவெளியே வரச்சொல்கிறார். கோபம், அகந்தை, பொறாமை, பொய், ஆங்காரம், பேராசை, தற்பெருமை போன்ற கட்டுகளால் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்த்துவிட்டு வா என சொல்கிறார். உலக மாயைகளால் மூடப்பட்டிருக்கும் முகமூடிகளை கழட்டி எறிந்து விட்டு மேலே எழுந்து வா என்கிறார்.

என் மக்களே! நான் உங்கள் பாவக்கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள் என்று ஆண்டவர் சொல்கிறார். எல்லாவற்றையும் அவர் பாதம் சமர்பிப்போம். ஆண்டவர் தாமே நம் ஒளி அவரே நம் மீட்பு.

செபம்: ஆண்டவரே நாங்கள் பாவத்தினால் கட்டப்பட்டு எங்கள் முகங்கள் மூடப்பட்டு கண்கள் ஒளி இழந்து வாழ்கிறோம். எங்களை மன்னியும். எங்கள் கட்டுகளை அவிழ்த்து விடும். உம் பிள்ளைகளாக சந்தோசமாக சமாதானமாக வாழ வரம் தாரும். ஒளியின் பிள்ளைகளாக உமது பிரசன்னத்தை காண அருள்புரியும். துணை செய்யும். ஆமென்.

Add new comment

9 + 7 =