அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார் - சாலமோனின் ஞானம் 13:3. காற்றோ, நெருப்போ, ஆகாயத்து விண்மீன்களோ, அலைமோதும் பெருங்கடலோ,  வான்மண்டல பெருங்சுடரோ அனைத்துமே நாம் ரசிக்கும் அளவுக்கு அழகானது என்றால் அதை படைத்த கடவுள் எவ்வளவு பெரியவர். ஞானம் மிக்கவர். வல்லமை உடையவர்.  உலகை ஆளுகின்ற அனைத்தையும் தன் கட்டளையால் ஆளுகிறவர்.

அவற்றின் அழகில் மயங்கி நிற்கும் நாம் அவற்றிற்கெல்லாம் மேலான கடவுளை போற்ற வேண்டும். அழகின் தலையூற்றாகிய கடவுளை ஆராதிக்க வேண்டும். படைப்புக்களின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு  அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றைவிட  வலிமையுள்ளவர் என்பதை உணர்ந்து அவரை வழிபட வேண்டும்.

கடலலைக்கு அந்த எல்லையை தாண்டி வராதே என்று வரையறை வைத்தவரும் கடவுளே. வானத்து கோள்களுக்கு உன் பாதையிலிருந்து நகராதே என கட்டளை இட்டவரும் அவரே. வர்ண ஜாலம் செய்யும் வண்ண மலர்களுக்கு வண்ணம் தீட்டியவரும் கடவுளே. காற்றை நோக்கி இதமாக வருடி செல், மழையை பார்த்து பூமியை நனைத்து செழுமையாகவை, என்றெல்லாம் ஆணயிடுபவர் கடவுளே.  அந்த கடவுளை அதிகாலையில் தேடுவது நம் கடமையாகும். 

ஜெபம்: படைப்புகளின் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம். இயற்கை மூலமாக எங்களை மகிழ்விப்பவரே உமக்கு நன்றி. இயற்கைக்கு எதிராக நாங்கள் செய்த பாவங்களை மன்னியும். அதிகாலையில் அனைத்து படைப்புகளோடு சேர்ந்து நாங்களும் உம்மை போற்றுகிறோம். வணங்குகிறோம். நன்றி செலுத்து கிறோம். எங்களையும் எங்களை சுற்றியுள்ள படைப்புகளையும் ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

2 + 5 =