அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன் - இணைச் சட்டம் 5:10. தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார். கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.

கடவுள் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றுகூட மாறாது செய்து முடித்தார். பேழை அமைப்பதிலிருந்து, விலங்குகள், பறவைகள், ஊர்வன பறப்பன என எல்லாவற்றையும் உள்ளே வைப்பது வரை கடவுள் சொன்னபடி நடந்தார். தேவையான உணவையும் கடவுள் சொன்னபடியே வைக்கிறார். அவர் வார்த்தைக்கு பணிந்து எல்லாவற்றையும் கொஞ்சம் கூட மாறாது செய்த நோவாவையும் அவர் குடும்பத்தையும் பேழைக்குள் வைத்து கடவுளே அதன் கதவை வெளிப்புறமாக பூட்டி பாதுகாத்தார். சரியாகச் ஒரு வருடமும்  பத்து நாட்களும் அவர்களை அந்த பேழைக்குள்  வைத்து பாதுகாத்து, வெள்ளம் வடிந்த பிறகு அவர்களை வெளியே வரும்படி ஆண்டவர் கூறுகிறார்.

ஆண்டவர் கூறியபடியே சிறுதும் பிசகாமல் நோவா நடந்தார்.  ஆண்டவரை அன்பு கூர்ந்தார். ஆண்டவரும் சிறிதும் குறையின்றி நோவாவுக்கும் அவரை சுற்றியிருந்த எல்லாவற்றுக்கும் உணவு, பாதுகாப்பு எல்லாவற்றையும் கொடுத்து காத்தார். நோவா புதல்வரின் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின (தொடக்க நூல் 10:32).

ஆண்டவர் தம்மேல் அன்பு கூர்ந்தவர்களை  பாதுகாப்பதோடு அவர்களை சுற்றியுள்ளவர்களையும்  குறையின்றி காக்கின்ற இறைவன்.

ஜெபம்: ஆண்டவரே நாங்கள் உம்மை அதிகமாக அன்பு செய்கின்றோம். எங்களையும் எங்கள் உறவினர்களையும்  எங்களை சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் பாதுகாத்தருளும்.  உம் பேரன்பினின்று எதுவும் எங்களை பிரிக்காது இருக்க வரம் தாரும்.

Add new comment

17 + 0 =